திமுக காங்கிரஸ் இடையே இருந்த 20 ஆண்டுகால கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கு மாற்று இருக்கை வசதி செய்து தருமாறு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கருணாநிதி, சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் – திமுக உடனான கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கனிமொழி எம்பி, மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்து தருமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாறிவரும் அரசியல் சூழல் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதை கருத்தில் கொண்டும், அவையில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அருகிலேயே எங்களது உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்ந்திருப்பது இனி பொருத்தமாக இருக்காது.
எனவே, திமுக நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு தங்கள் அலுவலகத்தை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
