எங்கள் நிலைபாட்டை இன்னும் எடுக்கவில்லை. தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக எங்கள் முன்னணி தோழர்களோடு கலந்து பேசி நாளை அறிவிப்போம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் , “இன்றைய அரசியல் நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் உயர்நிலை குழு கூட்டத்தை நடத்த உள்ளோம். இதில் முன்னணி தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்படும்.
கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் இருந்தாலும், கட்சியின் முன்னணி தோழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது என் கடமை” என்றார்.
ஸ்டாலின் உங்களிடம் என்ன பேசினார் என்ற கேள்விக்கு, “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று திமுக தலைவர் எங்களிடம் மனம் திறந்து பேசினார்” என்றார்.
அதிமுகவுக்கு திமுக ஆதரவு தருகிறதா என்பது தொடர்பான கேள்விக்கு, “இது குறித்து முன்கூட்டியே கருத்து சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தோழர்களின் கருத்துக்களை அறியாமல் நான் எதையும் சொல்ல முடியாது. கூட்டத்திற்குப் பிறகு நாளை காலை செய்தியாளர்களைச் சந்தித்து முடிவை அறிவிப்போம்” என்றார்.
