தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் பாஜக ஈடுபடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவாகி உள்ளநிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்ற செய்திகள் வெளியாகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு முறை விஜய் ஆளுநரை சந்தித்து அட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
