தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் உள்ள நிலையில் நிறைய ஊகங்கள் உள்ளன. அதற்கெல்லாம் நாம் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 11 எம்எல்ஏக்களின் அதரவு தேவை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் இடதுசாரிகட்சிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் எடுக்கும் முடிவு தமிழகத்தின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த குழப்பமான அரசியல் சூழலில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், ” மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அதுவே மிக முக்கியம். தேர்தல் முடிவுகள் யாருக்கும் தெளிவான தீர்க்கமான பெரும்பான்மையை வழங்காத சூழலில் நிறைய குழப்பங்கள் ஏற்படக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. அடிப்படையில் அதுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
திமுக ஆளுநருக்கு எதிராக நிறைய கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தற்போதைய ஆளுநரின் செயல்பாடு சட்டப்படி உள்ளதா என்ற கேள்விக்கு, இப்போதுள்ள சூழலிலேயே நிறைய குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களையும் எதிர்மறை கருத்துக்களையும், ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களையும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், எங்களது நிலைப்பாடு “ஆளுநர் வேண்டாம்” என்பதுதான். இந்த நிலைப்பாட்டில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக் காலத்திலும் தன்னை மாற்றிக் கொள்ளாது.”என்றார்.
திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு என்ற தகவல்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு, “நிறைய ஊகங்கள் உள்ளன. அதற்கெல்லாம் நாம் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது இல்லையா?” என்றார்.
