தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியும், இதுவரை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்காத நிலையில் திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் அதை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் விஜய்க்கு மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. விசிக, சிபிஎம், சிபிஐ, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி விஜய் தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இன்று சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் மாநிலக் குழு கூட்டங்களில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியும், இதுவரை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை.
இதற்கிடையில், ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், “ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களை நேரில் அழைத்து வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும். என்னிடம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எண்ணிக்கையை காண்பித்தால் போதும்” என்று தெரிவித்தார்.
அதே சமயம், “பெரும்பான்மை இல்லாமல் எப்படி ஆட்சி பொறுப்பேற்க அனுமதிக்க முடியும்? விஜய் முதல்வராகி பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் குதிரைப் பேரம் நடக்க வழிவகுக்கும்” என்றும் அவர் கூறினார்.
மேலும், “அதிமுகவும் திமுகவும் இணைந்து பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்கள் கொண்ட பட்டியல் வழங்கினால் அதை ஏற்க தயார். இது சரியோ தவறோ, எண்ணிக்கை மிகவும் முக்கியமானது. யாரும் பெரும்பான்மையை நிரூபிக்கா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
