தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தற்போது தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
சிபிஎம் கூட்டத்தில்…
சென்னையில் இன்று காலை சிபிஎம் கட்சியின் செயற்குழு கூட்டம் முதலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் சிலர், “தவெக தலைவர் விஜய்யை ஆதரிக்கலாம்; புதியதாக வந்துள்ள இளைஞர்களுக்கு ஆதரவு தருவதுதான் சரியாக இருக்கும்” என கருத்து தெரிவித்தனர்.
ஆனால் மற்ற நிர்வாகிகள், “நாம் திமுக கூட்டணியில் இருந்துதான் ஜெயித்திருக்கிறோம். காங்கிரஸைப் போல தவெகவை ஆதரித்து நாமும் துரோகம் செய்யக் கூடாது. இனி வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் நீடிக்க வேண்டும். அதனால் தவெகவை ஆதரிக்க வேண்டாம்.
அதே நேரத்தில் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்கு நாம் ஆதரவு கொடுப்பது சரியாக இருக்காது; அதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது நாம் வெளிநடப்பு செய்யலாம்” என்கிற கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிபிஎம் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சிபிஐ கூட்டத்தில் விரிவான விவாதம்
இதேபோல சிபிஐ கட்சியின் மாநில குழு கூட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஏன் ஆதரவு தரக் கூடாது?என்பதை மையமாக வைத்து விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
