நடிகர் சூர்யா நடிப்பில் , இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும், அவர்கள் வழிபடும் அக்னி குண்டத்தையும், மகாலட்சுமியையும் இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று ( ஆகஸ்ட் 11 ) விசாரணைக்கு வந்த போது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார், நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
