உலக வங்கி தலைவர் பதவியில் இந்திய வம்சாவளி!

Published On:

| By christopher

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

உலகளவிலான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் சமீபகாலமாக இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தற்போது உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். 2024ம்ஆண்டுடன் இவர் பதவி முடிவடையும் நிலையில் அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த 63வயதான அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “வரலாற்றின் இந்த இக்கட்டான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய்பங்கா தனித்துவமாக தெரிகிறார்.

அவர் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமான, உலகளாவிய நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.

அஜய் பணியாற்றிய நிறுவனங்கள் மூலம் பெருமளவு வேலைவாய்ப்பும், சிறப்பான முதலீடும் கிடைக்கப் பெற்றுள்ளன.

நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் உலகளாவிய தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து முடிவுகளை வழங்குவதில் அஜய் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக அஜய் பங்கா பணியாற்றி வருகிறார்.

30ஆண்டுகளுக்கும் மேலான வணிக அனுபவம் கொண்ட இவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். மேலும் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் போன்றவற்றிலும் தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது அமெரிக்க அதிபர் பரிந்துரையின் மூலம் உலக வங்கியின் தலைவராக பதவி ஏற்கவுள்ள முதல் இந்தியர் அஜய் பங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

5000 கோடி பணம்… 5000 கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!

ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share