தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வோர் உணவு வகை ஃபேமஸ். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கீழக்கரையில் இந்த கீழக்கரை மீன் குழம்பு ஃபேமஸ்.
இந்தக் குழம்புக்குப் பயன்படுத்தப்படும் வஞ்சிர மீன் தற்போது எல்லா இடங்களிலும் கிடைப்பதால் நீங்களும் இந்தக் கீழக்கரை மீன் குழம்பு செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
என்ன தேவை?
வஞ்சிர மீன் – அரை கிலோ
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
பச்சைமிளகாய் – 4
தக்காளி – ஒன்று
பூண்டு – 100 கிராம்
தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக்கொள்ளவும் )
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சின்ன வெங்காயத்தில் பாதியை எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். மீனை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
இதில் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, இத்துடன் ஊற்றிக் கொதிக்கவிடவும். மீனைச் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து மீன் வெந்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.