கிச்சன் கீர்த்தனா: தஞ்சாவூர் மட்டன் குழம்பு

Published On:

| By Minnambalam

நெற்களஞ்சியமான தஞ்சாவூர் என்றதும் பெரிய கோயிலும் தலையாட்டி பொம்மையும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் உணவுப்பிரியர்களுக்கு தஞ்சாவூர் மட்டன் குழம்பு நினைவுக்கு வரும்.

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் உணவுப் பழக்கமும், உணவுத் தயாரிக்கும் விதமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன. அந்தவகையில் இந்த தஞ்சாவூர் மட்டன் குழம்பு அங்குள்ள பலரின் ஃபேவரைட். இதை நீங்களும் செய்து சுவைக்கலாம்.

ADVERTISEMENT

என்ன தேவை?

மட்டன் – அரை கிலோ
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
அரைக்க :
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் – 5
மிளகு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கருகாமல் வறுத்து, சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ADVERTISEMENT

மட்டனை மீடியம் சைஸில் நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்த மட்டன் சேர்த்து வேகவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாறி கரையும் வரை வதக்கவும்.

இத்துடன் வேகவைத்த மட்டனைச் சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் கலவையோடு சேரும் போது அரைத்தவற்றைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும் மசாலா வாசனை போனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

மீதமாகும் பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?

கிச்சன் கீர்த்தனா : மொஹல் மட்டன் கிரேவி

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share