போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.எஸ்.சிவசங்கர். இவரிடம் வேலை வாங்கித் தருமாறு, ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அணுகியதாகக் கூறப்படுகிறது. அப்போது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணி பெற்றுத் தருவதற்காக 23 லட்சம் ரூபாய் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளராகச் செயல்பட்ட இளஞ்செழியன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து பணமோசடி விவசாகரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிவசங்கருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
