வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை ரவிசங்கர் என்பவரது மகனின் உயர் கல்விச் செலவை திமுக சட்டசபை கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலியாகினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அனைவரது உடல்களும் கடந்த ஜூலை 14-ந் தேதி தாயகம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவிசங்கரும் (வயது 51) ஒருவர். ரவிசங்கர், திருவண்ணாமலையில் நீண்டகாலமாக செல்போன்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதனடிப்படையில் லாவா (Lava) நிறுவனம் ஏற்பாடு செய்த வியட்நாம் சுற்றுலாவுக்கு ரவி சங்கரும் சென்றிருந்தார். உயிரிழந்த ரவிசங்கருக்கு மனைவி காயத்ரி, 11-வது வகுப்பு பயிலும் மகன் ராம் பிரசாத், 8-வது வகுப்பு பயிலும் மகள் சொர்ணலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் வசித்து வரும் ரவிசங்கரின் குடும்பத்தினரை நேற்று ஜூலை 25-ந் தேதி நேரில் சந்தித்து எ.வ.வேலு ஆறுதல் கூறினார். அப்போது ரவிசங்கர் மகனின் உயர் கல்விச் செலவை தாமே ஏற்பதாக எ.வ.வேலு, அந்த குடும்பத்தினரிடம் உறுதியளித்தார்.
படங்கள்:







