சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இன்று (ஜூலை 25) பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடி இருந்த இளைஞர்கள் மெரினா கடற்கரையை திறந்து விடுங்கள் என்று கோஷம் எழுப்பியதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்திரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் தீயாய் பரவியது.
சென்னை சிபிஐ அலுவலகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இன்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள், போராடுவதற்காக மெரினாவை திறந்து விடுங்கள் என்று கோஷம் எழுப்பினர்.
அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே மெரினா… மெரினா என தொடர்ந்து குரல் எழுப்பினர்.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன், “தோழர்களின் குரல் எங்களுக்கு கேட்கிறது. ஒரு நொடி அமைதியாக இருங்கள்” என்று கேட்டும் மாணவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் அமைச்சரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே மாணவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக சென்னை மெரினா கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணிக்காக காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம் சாலை, மெரினா சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
