காவிரி (Cauvery) நதிநீர் பிரச்சனையில் தமிழக முதல்வர் விஜய்க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு (Vanni Arasu) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அமைச்சர் வன்னி அரசு நேற்று ஜூலை 25-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதாக முதல்வர் விஜய் அலுவலகத்திலிருந்து எந்த செய்திக் குறிப்பும் வரவில்லை. முதல்வர் விஜய் அல்லது முதல்வர் சார்பாக வருகின்ற அறிவிப்புகளைத்தான் நாம் அதிகாரப்பூர்வமானது என ஏற்றுக்கொள்ள முடியும்.
மேகதாது அணை தொடர்பாக முதல்வர் விஜய், சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானமே போதுமானது. அந்த தீர்மானத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் விடுதலைச் சிறுத்தைகளும் அந்த தீர்மானத்தை ஏற்று வழிமொழிந்து கைதட்டி வரவேற்றோம்.
ஆகையால் மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் அந்த நிலைப்பாடு சரியானது. கர்நாடகாவுக்கு போய் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. அது தேவையும் இல்லை.
தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிக்கும் வரை அவர் அறிவிக்கின்ற அறிவிப்புதான் இறுதியானது, உறுதியானது. இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதேபோல திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
