தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 16) கோவையில் காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “செந்தில் பாலாஜி அரக்கனை விடக் கொடியவர். வைரஸை விட மோசமானவர். கரூர் மக்களுக்கு நாமம் போட்டுவிட்டு கோவை தெற்குக்கு வந்துவிட்டார். 5 கட்சிகளுக்கு சென்ற அமாவாசை. கோடு போட்டால் ரோடு போடுவாராம். கரூரில் ரோடு போட்டதில் ஊழல் செய்தவர்; 10 ரூபாய் கமிஷன் அடித்தவரை கோவையின் சிம்ம சொப்பனம் என்கிறார் ஸ்டாலின். கோவை செல்வம் கொழிக்கும் பகுதி என்பதால் இங்கு நிற்கிறார்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், “இன்று ஸ்டாலின் கருப்புக் கொடி கட்டுகிறாராம். கோவையில் எங்கேயும் கருப்புக் கொடியை நான் பார்க்கவில்லை. தேர்தல் தோல்வி பயத்தால் அவருக்கு ஜூரம் வந்துவிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்காது என்று சொல்லியிருக்கிறார். இவர் நினைப்பதற்கு மேல் அற்புதமாக பாராளுமன்றத் தொகுதி வரைமுறை செய்வார்கள்.ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதிக்காத அளவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதிமொழி கொடுத்துவிட்டார். தொகுதி வரையறை சிறப்பாகச் செயல்படும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இதைச் செய்கிறார்” என்றார்.
என்னுடைய கருத்து அதிர்ச்சி அளிப்பதாக ப. சிதம்பரம் சொல்கிறார். ப. சிதம்பரம் எத்தனை வருடம் மத்திய மந்திரியாக இருந்தார்? அவர் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தார்? சிதம்பரத்திற்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.மேலும், “தமிழகத்தில் இருந்து 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கள் என்ன விஷயத்திற்காக குரல் கொடுத்திருக்கின்றனர்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
