முதல்வர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் கருப்பு கொடி- தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்!
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதம் கடுமையாக குறையும்; வட மாநிலங்களின் விகிதம் அதிகரிக்கும் என்பது குற்றச்சாட்டு.
இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இல்லம், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் இல்லம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள், தலைவர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று கருப்பு உடைந்து கருப்பு கொடி ஏற்றியதுடன், மத்திய அரசின் மசோதா நகலையும் எரித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்.
