மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 18-ந் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 18-ந் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 18-ந் தேதி முற்பகல் 11:10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்கிறார்.
முற்பகல் 11.45 மணிக்கு பொன்னேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.
பொன்னேரி பொதுக் கூட்டம் முடிந்த பின்னர் சோளிங்கரில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
பிற்பகல் 1.15-க்கு சோளிங்கர் பிரசார கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, அங்கிருந்து பகல் 2.10 மணிக்கு சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்புகிறார்.
இதனையடுத்து சென்னையில் இருந்து பகல் 2.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார் ராகுல் காந்தி.
மாலை 3.45 மணிக்கு திருச்சி சென்றடையும் ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூர் செல்கிறார். துறையூரில் மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சிக்கு திரும்புகிறார் ராகுல் காந்தி.
மாலை 5.40 மணிக்கு தமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு திருச்சியில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார் ராகுல்.
