ஆதவ் அர்ஜுனா தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை குறிப்பிடவில்லை என்று கூறி வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக எடப்பாடி தவிர மற்ற 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனைவியின் சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட அவரது வேட்புமனு மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும், தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
