அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவும் சூழலில் ஒரு தரப்புக்கு ஆதரவாக சென்று விஜய் சந்தித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, அம்மா அவர்கள் காலத்திலும் சரி, தங்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவன் நான்.
அந்த இரு தலைவர்களையும் நாங்கள் முன்னிறுத்தி மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதன் மூலம், தமிழகத்திலேயே 47 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். அப்படிப்பட்ட நிலையில், கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.
எல்லா கட்சிகளிலும் இது உண்டு. ஆனால், அந்தச் சூழ்நிலையில் ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயமானது என்பது எனக்குப் புரியவில்லை. இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு வருகிறேன்.
எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போலவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் சுட்டிக்காட்டியதைப் போலவும், இது குதிரைப் பேரத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.”என்றார்.
