சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கியத் தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது குறித்து முறையான சிபிஐ (CBI) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மின்வாரிய அதிகாரி மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக மின்வாரியம் சார்பில் இதுவரை 8 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “”மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) காணவில்லை எனச் செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில், டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்தத் திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியைக் காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
எனவே, இந்த ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும்!” என வலியுறுத்தி உள்ளார்.
