முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 23) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.
ஆனால், அந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதி வழங்குவதற்கு அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆ.வைத்திலிங்கத்திற்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
மேலும் லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சியில் உள்ள பாப்பகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதேபோல, லஞ்சம் பெற்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர்” என அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இதனை உறுதி செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் ஆ.வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவர்களது முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் வைத்திலிங்கம் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் இருக்கும் வைத்திலிங்கம் அறையிலும் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா