சிபிஎம்- திமுக இடையே அனல் பறக்கும் ”கட்டுரை போட்டி”

Published On:

| By Mathi

CPM DMK

சிபிஎம் (CPM) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரில் ஜூன் 19-ந் தேதி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

இந்த கட்டுரையை முன்வைத்து கடந்த 2 நாட்களாக திமுகவின் (DMK) அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன், ”பெ.சண்முகத்தின் உண்மை முகம்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியிட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்த கட்டுரைகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

தீக்கதிரில் ஜூன் 19-ந் தேதி பெ.சண்முகம் எழுதிய கட்டுரை:

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவைச் சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் ஆளுநரின் நிலையும்

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கோ, அணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றது.

அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை, அந்த எண்ணிக்கைக்குரிய ஆதரவு கடிதங்களை அளித்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதற்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம் “தவெக 108, காங்கிரஸ் 5 என 113 இடங்கள் என்று குறிப்பிட்டு கடிதம் அளித்தனர். 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே என்று உறுதியாக அவர்களே தெரிவித்த பிறகு எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் உரிமை கோரவில்லை” என்பது. ஆனால், பெரும்பான்மையை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறியுள்ளதை நாம் அறிவோம்.

ADVERTISEMENT

சிபிஐ(எம்) முன்னால் இருந்த மூன்று வாய்ப்புகள்

இத்தகைய சூழ்நிலையில் சிபிஐ(எம்)-க்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தன.

  1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
  2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
  3. எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக் கூடாது?

உடனடியாக மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தேர்தலை அனுமதிப்பதா இல்லையா என்பதும் ஒன்றிய பாஜக அரசின் கையில்தான். ஆளுநர் மூலமாக தாங்களே நேரடியாக ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயமாக அதை அவர்கள் தவற விடமாட்டார்கள்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய நோக்கமும் பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வழிவகுப்பது மேற்கண்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும். பிறகு, தேர்தல் நடந்தாலும் அது ஒன்றிய பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் நடக்கும் சூழல் இருக்கும். எனவே, எக்காரணங்கொண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம்.

மக்கள் அளித்த தீர்ப்பும் இடதுசாரிகளின் முடிவும்

இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றுள்ளது. சட்டப்படியும் முதல் வாய்ப்பு இந்தக் கட்சிக்கே உள்ளது. ஏறத்தாழ 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ‘ஆட்சி மாற்றம்’ – அதாவது திமுக-அதிமுக அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் தீர்மானித்தன.

யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை. எனவே, இந்த மிக முக்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது.

“அதிமுக-திமுக கூட்டு” யோசனை நிராகரிப்பு

அதிமுக ஆட்சி அமைப்பது – திமுக ஆதரிப்பது; அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக-அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்கடித்திருக்கிறார்கள். அதிலும் பாஜக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குக்கும் குறைவாகப் பெற்று வாக்கு சதவிகிதமும் பெருமளவு குறைந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக-திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிட கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது?

இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக-அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததன் மூலம்,

  1. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
  2. திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்.

இளைஞர்களின் பேராவேசமும் சமூக வலைதள விமர்சனங்களும்

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து “புதிய மாற்று சக்தி” ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இடதுசாரி – வலதுசாரி இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலேயே இளைஞர்களின் பேராவேசத்தைக் கண்டோம். எனவே, இங்கு மட்டும் மாற்றமே கூடாது என்பது சரியா?

சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தவெகவினர் வெற்றி பெற்று விட்டனர், இது ரீல்ஸ் ஆட்சிதானே தவிர ரியல் ஆட்சி அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆம், திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தினர். சமூக வலைதளம் மூலம் மக்களின் முன் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் என்ன? ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக ஆட்சியும் கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் உணர்ந்தனர். லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு, கனிம வளக் கொள்ளை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்; திமுக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும், பல வாக்குறுதிகள் காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதும் உள்ளிட்ட பிரச்சனைகளைத்தான் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் முன்வைத்தனர். நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும்.

தவெகவின் உறுதிமொழியும் கம்யூனிஸ்ட்டுகளின் அனுபவமும்

ஆதரவு கேட்டு தவெக அளித்த கடிதத்தில் “மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அனைவருக்குமான ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும். நேர்மையான ஆட்சியைத் தருவோம்” என்று கூறியிருந்தனர். நேரில் சந்தித்தபோதும் இதை உறுதிப்படுத்தினர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. வெளியிலிருந்து ஆதரவு, கூட்டணி ஆட்சி போன்ற அனுபவங்களெல்லாம் வேறு எந்தக் கட்சியையும் விட செழுமைமிக்க அனுபவம் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. புதிய அரசியல் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த சிறப்பான முடிவு என்றுதான் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.

விமர்சிப்பவர்கள் முன்வைக்கும் கருத்து: திமுக அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெகவை ஆதரிக்கலாமா? விஜய் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா? அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், முற்றிலும் புதியவர்கள் என்பது.

ஏற்கெனவே, திமுக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை ஏற்க முடியாது என்பதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக ஆட்சி அமைப்பதுதான். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் அமைந்திருக்கும். இதை எவரும் ஏற்க முடியாது. எனவே, தவெகவை ஆதரிப்பது என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு மிகச்சரியானது.

இதில் திமுகவினர் கோபம் கொள்வதில் எந்த அடிப்படையும் இல்லை.

முன் அனுபவம் குறித்த விமர்சனங்களுக்கான பதில்

இரண்டாவது, விஜய் ஒரு நடிகர் என்ற அளவுகோலை வைத்துத்தான் அவருக்கு அரசியல், ஆட்சி என்றால் தெரியுமா என்று கேட்பது. என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆட்சி அமைத்தபோதும் இதுபோன்ற விமர்சனங்கள்தான் முன்வைக்கப்பட்டன. மக்களிடம் இந்த விமர்சனம் எடுபடவில்லை என்பதுதான் அனுபவம். அவர்கள் புதிது, முன் அனுபவம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மக்கள் தங்களை நம்பித் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களை விட அவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். எனவே, மக்கள் நம்பிக்கையைத் தக்க வைக்க நல்ல முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அக்கறையுடன் கற்றுக் கொள்வார்கள் என்றே கருதுகிறோம்.

மூன்றாவதாக, தவெக 35 சதவிகித வாக்குகளைத்தானே பெற்றிருக்கிறது, 65 சதவிகித மக்கள் எதிராகத்தானே வாக்களித்திருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இல்லை. மற்ற கட்சிகளை விட அதிக இடங்களைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்கும் என்பதுதான் நிலை. அகில இந்திய அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதுதான் கடைபிடிக்கப்படுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற கட்சிகளால் இந்த கோரிக்கை முனைப்பாக முன்வைக்கப்படாததால் இது விவாதப் பொருளாக ஆகவில்லை. வரும் காலத்தில் வலுவாக இதை வலியுறுத்த வேண்டும்.

திமுக அல்லது அதிமுகவை தேர்ந்தெடுப்பது மட்டும்தான் மக்களுக்கு இருந்த வாய்ப்பு என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டில் ‘இரு துருவ ஆட்சி’ என்று நிலவிய நிலைக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது முக்கிய திருப்புமுனையாகும்.

புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்களும் சிபிஐ(எம்)-ன் பார்வையும்

புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் அரசியல், பொருளாதாரக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய – மாநில அரசுகள் கடைபிடித்த தாராளமய பொருளாதார கொள்கை காரணமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் சொத்துக்களின் குவிப்பு; மற்றொரு பக்கம் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லாடும் பெரும்பகுதி மக்கள்.

கௌரவமான, நிரந்தரமான வேலை, உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் என்பதெல்லாம் பொய்யாய், கனவாய் போய்விடுமோ என்ற அளவுக்கு வேலையில் இருப்பவர்கள், வேலை தேடுவோர் நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறியுள்ளது. இதில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மையான, ஊழலற்ற ஆட்சி என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எவையெல்லாம் தவறு, குறை என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அவற்றையெல்லாம் இல்லாமல் சரி செய்ய வேண்டிய கடமை புதிய ஆட்சிக்கு உள்ளது. மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அரசுக்கான நிதி வருவாயை எப்படிப் பெருக்குவது என்பது முக்கியமான சவால். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் தொடர்பாக இவர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள்? மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கும் முன் வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு கால அவகாசம் தேவை என்பது சரியே.

ஏற்கெனவே, முதல்வர் விஜய் அவர்கள் கொடுத்துள்ள உறுதிமொழிகளுடன், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும், ஆதரவளிக்கும். மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்த்துப் போராடுவோம் என்பதுதான் இந்த ஆட்சி குறித்த கட்சியின் நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

கட்சியின் சார்பில் சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண முடியும் என்ற எந்த மாயையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடையாது. அதே நேரத்தில், மக்களின் உரிமைகளைக் காக்க, கோரிக்கைகளை எடுத்துரைத்து, வலுவாகக் குரல் எழுப்ப முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளை அம்பலப்படுத்த முடியும்.

எனவே, அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியான அரசியல் நிலைபாட்டையே மேற்கொண்டுள்ளது. இவ்வாறு பெ. சண்முகம் அந்த கட்டுரையில் எழுதி இருந்தார்.

முரசொலியில் ப. திருமாவேலன் எழுதி வரும் கட்டுரை

பெ.சண்முகத்தின் ‘தீக்கதிர்’ கட்டுரையை முன்வைத்து ஜூன் 23-ந் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதி வரும் தொடர் கட்டுரையின் முதல் பகுதி

குற்­றம் உள்ள நெஞ்சு குறு­கு­றுக்­கும் என்­ப­தைப் போல மே மாதம் 8 ஆம் தேதி எடுத்த முடி­வுக்கு ஜூன் மாதம் 19ஆம் தேதி­யன்று விளக்­கம் அளித்து மிக நீண்ட கட்­டுரை எழு­தி­யி­ருக்­கி­றார் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் பெ.சண்­மு­கம். ‘புதிய அர­சி­யல் சூழ­லும், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் நிலைப்­பா­டும்’ என்று பெரிய தத்­து­வார்த்த தலைப்­பைச் சூட்டி இருக்­கி­றார். ஏதோ தமிழ்­நாட்­டில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்து விட்ட மகிழ்ச்­சி­யில் அந்­தக் கட்­டுரை தீட்­டப்­பட்­டுள்­ளது.

விஜய் ஆட்சி அமைக்க ஆத­ரவு என்ற நிலைப்­பாடு மார்க்­சிய, லெனி­னிய, கம்­யூ­னிச, சோச­லிச நிலைப்­பாடு என்­ப­தாக சண்­மு­கம் நினைத்­துக் கொண்டு ஒரு பக்­கத்­துக்கு நீட்டி முழங்கி இருக்­கத் தேவை­யில்லை.

  • குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வந்­து­விடும்.
  • தேர்­தல்வந்­து­வி­டும்

என்று சொல்­வது எல்­லாம் உல­கப் பம்­மாத்து ஆகும். சண்­மு­கத்­தின் உண்­மை­யான நோக்­கம், ‘திரா­வி­டக் கட்சி இல்­லாத ஆட்சி அமைய ஆத­ரவு’ என்­ப­து­தான். அத­னால்­தான் த.வெ.க. ஆட்­சியை விழுந்­த­டித்து போய் ஆத­ரித்­துள்­ளோம் என்­பதை சண்­மு­கமே கக்கி விட்­டார்.

‘புதிய அர­சி­யல் சூழல்’ என்று அவர் சொல்ல வரு­வது.. “ தி.மு.க. அல்­லது அ.தி.மு.க.வைத் தேர்ந்­தெ­டுப்­பது மட்­டும்­தான் மக்­க­ளுக்கு இருந்த வாய்ப்பு என்று கடந்த 50 ஆண்­டு­களுக்கு மேலாக தமிழ்­நாட்­டில் ‘இரு துருவ ஆட்சி’ நில­விய நிலைக்கு இந்­தத் தேர்­த­லில் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது என்­பது முக்­கிய திருப்­பு­முனை ஆகும்’’­என்று தனது உண்­மை­யான மகிழ்ச்­சியைசண்­மு­கம் வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார். மேற்கு வங்­கத்­தில் பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்­தா­லும் பர­வா­யில்லை, மீண்­டும் மம்தா ஆட்­சிக்கு வந்­து­வி­டக் கூடாது என்று நினைத்­தார்­களே அதைப் போல!

சண்­மு­கம் இந்­தக் கட்­டு­ரையை எழுதி வெளி­யிட்ட அன்று, இவ­ருக்கு முன்­ன­தாக செய­லா­ள­ராக இருந்த கே.பால­கி­ருஷ்­ணன் அளித்த பேட்­டி­யில்,‘ திரா­விட ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க 1989 ஆம் ஆண்­டில் இருந்து முயற்­சித்து வரு­கி­றோம்’ என்று சொல்லி இருக்­கி­றார். இவர்­கள் எல்­லாம் பி.ராம­மூர்த்தி டானிக்­கில் வளர்ந்­த­வர்­கள் இப்­ப­டித்­தான் இருப்­பார்­கள். திரா­விட இயக்க ஒவ்­வாமை ஒன்­று­தான் இவர்­க­ளது இலக்­க­ணம். அத­னால்­தான் விஜய்­யி­டம் ஆத­ர­வுக் கடி­தத்­தைக் கேட்டு வாங்கி இவர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்­கள்.

ஆத­ர­வுக் கடி­தம் இல்­லா­மல் காங்­கிரஸ் ஆத­ரித்­த­தற்­கும், ஆத­ர­வுக் கடி­தத்தை கம்­யூ­னிஸ்ட்­டு­கள் கேட்டு வாங்­கி­ய­தற்­கும் பெரிய வித்­தி­யா­சம் ஏது­மில்லை.

திரா­விட ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க ஒரு தேர்­த­லில் தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வையும், மறு தேர்­த­லில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தி.மு.க. வையும் தோற்­க­டிக்­கப் பார்ப்­ப­து­தான்அவர்­க­ளுக்குத் தெரிந்த தேர்­தல் உத்­தி­கள்ஆகும். மக்­கள் நலக் கூட்­டணி வைத்து மண்­ணைக் கவ்­வி­ய­தை­யும் தமிழ்­நாடு பார்த்­துள்­ளது. முப்­பது ஆண்­டு­க­ளாக இவர்­க­ளது தேர்­தல் உத்தி இது ஒன்­று­தான். இவர்­க­ளுக்கு இப்­போது விஜய், கலங்­கரை விளக்­க­மா­கத் தெரி­கி­றார். உண்­மை­யான மாற்­றம் என்­பது கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளுக்­குத்­தான் கிடைத்­திருக் கி­றது. புதிய பல்­லக்கு!

இந்தத் தேர்­த­லில் தி.மு.க., அ.தி.மு.க. அல்­லாத ஒரு கட்சிகூடு­தல் இடங்­க­ளைக் கைப்­பற்­றி­ய­தும் உட­ன­டி­யாக அதனை ஆத­ரிக்க சண்­மு­கம் முடி­வெ­டுத்­து­விட்­டார். மற்­ற­படி குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி அமைந்­து­வி­டும் என்­ப­தெல்­லாம் சண்­மு­கத்­தின் அதீத கற்­பனை ஆகும்.

அமைச்­சர் பதவி தரு­கி­றோம், வாரி­யம் தரு­கி­றோம், இன்­னும் பல தரு­கிறோம் என்று ஆசை வார்த்­தை­கள் காட்­டப்­பட்டு, குதிரை பேரம் மட்­டு­மல்ல, எல்­லாப் பேர­மும் நடத்­தப்­பட்டு அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 உறுப்­பி­னர் ஆத­ரவை விஜய் வாங்கி விட்­டார். எனவே இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், விடு­த­லைச்சிறுத்­தை­கள், முஸ்­லிம் லீக் ஆத­ரவு தர­வில்லை என்­றா­லும் தனது பெரும்­பான்­மையை நிரூ­பித்­தி­ருப்­பார் விஜய்.

த.வெ.க.வின் 107 என்ற எண்­ணிக்­கை­யு­டன் அ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் 25 பேரின் வாக்­கு­க­ளை­யும் சேர்த்­தால் 132 வாக்­கு­கள் வந்­து­விட்­டது. எனவே, குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வரா­மல் தடுப்­ப­தற்­காக ஆத­ரித்­தோம் என்று சண்­மு­கம் சொல்­வதே ஊரை ஏமாற்­றும் பசப்­பு­வா­தம் ஆகும்.

‘யார் ஆட்சி அமைத்­தா­லும் இட­து­சா­ரி­கள் ஆத­ரவு இல்­லா­மல் ஆட்சி அமைக்க முடி­யாது என்­ப­து­தான் நிலைமை. எனவே இந்த மிக முக்­கி­ய­ மான பொறுப்­பைச் சரி­யாக நிறை­வேற்ற வேண்­டும் என்ற அக்­க­றை­யு­டன் கட்சி இதை அணு­கி­யது’’ என்று மார்­தட்­டிக் கொள்­கி­றார் சண்­மு­கம்.

தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற நான்கு கட்­சி­க­ளின் ஆத­ர­வைப் பெற்ற பிறகு, இந்­தக் கட்­சி­களை உண்­மை­யில் நம்பி இருந்­தால் அ.தி.மு.க. தயவை நாடி இருக்க மாட்­டார் விஜய்.

பெ.சண்­மு­கம் போன்­ற­வர்­களை விட விஜய் அதி­கம் நம்­பி­யது சி.வி.சண்­மு­கத்­தைத்­தான். அ.தி.மு.க. எதிர்ப்பை கூர்­மை­யா­கப் பேசும் பெ.சண்­மு­கம், சி.வி.சண்­மு­கம் வீட்­டுக்கு விஜய் போன­தும், ‘த.வெ.க. ஆட்­சிக்கு ஆத­ரவு இல்லை’ என்று அறி­வித்­தி­ருந்­தால் அவ­ரைப் பாராட்­ட­லாம்.

144 உறுப்­பி­னர் ஆத­ர­வு­டன் விஜய் தனது பெரும்­பான்­மையை நிரூ­பித்து உள்­ளார். இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 உறுப்­பி­னர் ஆத­ர­வும் இருக்­கி­றது. அ.தி.மு.க. தய­வு­டன் அமைந்­துள்ள ஆட்­சியை ஆத­ரிப்­பது சண்­மு­கத்­துக்கு கேவ­ல­மா­கத் தெரி­ய­வில்­லையா? சி.வி.சண்­மு­க­மும் பெ.சண்­மு­க­மும் ஒரே நேர்­கோட்­டில் தான் நிற்­கி­றார்­கள். கொள்­கைப் புட­லங்­காய் ஏது­மில்லை.

இன்று ஜூன் 24-ந் தேதி வெளியான பகுதி- 2

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் பெ.சண்­மு­கம் எழுதி இருக்­கும் கட்­டு­ரை­யில் சகிக்க முடி­யா­தது, ‘சி.பி.எம். முன்­னால் இருந்த மூன்று வாய்ப்­பு­கள்’ என்ற பகுதி ஆகும்.

  • த.வெ.க. ஆட்சி அமைக்க ஆத­ரவுகடி­தம் கொடுத்த நிலை­யில் ஆத­ரிப்­பது.
  • தி.மு.க. ஆத­ர­வு­டன் அ.தி.மு.க.ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு அளிப்­பது.
  • யாரும் ஆட்சி அமைக்­க­வில்லை என்­றால் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி அமை­யும் நிலை.
  • இது­தான் அவர் முன்­னால் இருக்­கும் வாய்ப்­பு­க­ளாம்.

ஒரு மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி யாரை ஆத­ரிப்­பது என்­ப­தற்கு இப்­படி மொன்­னை­யான அள­வு­கோல்­கள் மட்­டும் தான் உண்டா? சிவப்­புத் துண்டு போட்­டி­ருப்­ப­தால் கொள்­கைப்­பூர்­வ­மா­கவே கேட்­போம்.

  • ஒரு கம்­யூ­னிஸ்ட் கட்சி எந்த வர்க்­கத்தை ஆத­ரிப்­பது?
  • ஆட்சி அதி­கா­ரத்­தைப் பெறப்­போகும் அர­சி­யல் சக்­தியை பின்­னால் இருந்து இயக்­கு­ப­வர்­கள் யார்?
  • நாம் எடுக்­கும் நிலைப்­பாட்­டின் மூல­மாக பல­ன­டை­யப் போகும் சக்தி யார்?
  • இது தானே ஒரு கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் நிலைப்­பா­டாக இருக்க முடி­யும் என்று அப்­பாவி மார்க்­சிஸ்ட் நினைப்­பார்! ஆனால் சண்­மு­கத்­துக்கு அப்­படி எந்­தச் சிந்­த­னை­யும் இல்லை.
  • ஆத­ர­வுக் கடி­தம் யார் அனுப்­பி­னா­லும் ஆத­ரித்து விடு­வார்­களா?
  • த.வெ.க. ஆட்­சிக்கு ஆத­ரவு என்ற நிலைப்­பாட்டை தயக்­கம் இல்­லா­மல் ஒரு கம்­யூ­னிஸ்ட்கட்சி எப்­படி எடுக்க முடி­யும்? அவர்­கள் யார் என்று சண்­மு­கத்­துக்கு தெரி­யாதா? யாரால், எத்­த­கைய சக்­தி­க­ளால்சூழப்­பட்­ட­வர் விஜய் என்­பது சி.பி.எம்.க்குத் தெரி­யாதா?

எத்­த­கைய ஆட்­சியை ஆத­ரித்­துள்­ளீர்­கள்? கடந்த ஏப்­ரல் மாதம் முழுக்க வெளி­யான ‘தீக்­க­திர்’ நாளி­தழை திருப்­பிப் பார்த்­தாலே தெரி­யுமே விஜய் யார் என்று?

  • ஏலம் போடும் ஜன­நா­ய­கம் – லாட்­டரிமாஃபி­யா­வும் கார்ப்­ப­ரேட் நிழ­லில் ஆடும் கட்­சி­க­ளும்’ என்ற கட்­டு­ரை­யில் மார்ட்­டின் குடும்­பத்­தின் ஊடு­ரு­வல் ஜன­நா­ய­கத்­தின் மீதான நேரடி தாக்­கு­தல் என்­றும், லாட்­டரி பணத்தை அர­சி­யல் அதி­கா­ரத்­தைப் பிடிக்­கப் பயன்­ப­டுத்­து­வது வர­லாற்று முரண் என்­றும் எழு­தி­யது ‘தீக்­க­திர்’.( ஏப்­ரல் 1) த.வெ.க.வின் அடித்­த­ளமே வரி ஏய்ப்பு புகார்­கள் மற்­றும் கிரி­மி­னல் வழக்­கு­க­ளில் ஆடிக் கொண்­டி­ருக்­கி­றது என்று எழுதி இருக்­கிறது ‘தீக்­க­திர்’.
  • தூய சக்தி வேட்­பா­ளர்­க­ளின் தீய பின்­ன­ணி­கள் ( 3.4.2026)
  • விஜய்­யின் லாஜிக் இல்­லாத மேஜிக் ஷோ ( 4.4.2026)
  • ‘நெல்­லை­யில் விஜய்­யின் சார­மில்லா பிரச்­சா­ரம்’ கட்­டு­ரை­யில் அவ­ரது மதச்­சார்பு முகம் கிழித்­தெ­றி­யப்­பட்­டது.( 9.4.2026)
  • மக்­க­ளின் வாக்­கு­களை பிரிப்­ப­தற்­கா­கவே இத்­த­கைய கட்­சி­கள் கள­மி­றக்­கப்­ப­டு­கின்­றன என்று விஜய் கட்சி மீது பாய்ந்­தார் பெ. சண்­மு­கம் ( 9.4.2026)
  • ‘இது மக்­க­ளுக்­கான இயக்­கமோ மாற்று அர­சி­யலோ அல்ல. சிறு­பான்­மை­யி­ன­ரின் வாக்­கு­களை சிதைப்­ப­தற்­காக பின்­னப்­பட்டநுணுக்­க­மான சூழ்ச்சி வலை’என்று ஏ.ஆர்.பாஷா­வின் விரி­வானபேட்­டியை, ‘தவெ­க­வின் போலி முகத்­திரை’ என்ற தலைப்­பிட்டு தீக்­க­திர் வெளி­யிட்­டுள்­ளது. 15.4.2026)
  • துப்­பாக்கி, பீட்ஸ், ஜன­நா­ய­கன் – இஸ்­லா­மி­யர்­க­ளைத் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கும் விஜய்­யின்சந்­தர்ப்­ப­வா­தங்­கள் (15.4.2026)
  • காகி­தப் பூக்­க­ளில் நிதர்­சன அர­சி­ய­லும் ( 17.4.2026)
  • இது திரைப்­ப­ட­மல்ல மிஸ்­டர் விஜய் ( 18.4.2026)
  • வெள்ளி பர்­தா­வும் வெற்று வாக்­கு­று­தி­க­ளும் ( 20.4.2026)
  • இப்­படி எத்­த­னையோ செய்­தி­கள் ‘தீக்­க­தி­ரி’ல் இருக்­கி­றது. இத்­த­கைய ஆட்­சி­யைத் தான் கண்ணை மூடிக் கொண்டு ஆத­ரித்­துள்­ளார் சண்­மு­கம்.

கடந்த காலத்தை மறந்­தி­ருக்க மாட்­டார் பெ. சண்­மு­கம். வாச்­சாத்தி மக்­க­ளுக்­காக உண்­மை­யாக உழைத்த மாபெ­ரும் தியா­கம் அவ­ரு­டை­யது. அவர் அன்று அந்­தப் பிரச்­சி­னை­யைக் கையில் எடுக்­க­வில்லை என்­றால் அந்த அப்­பாவி மக்­க­ளுக்கு இன்று நீதி கிடைத்­தி­ருக்­காது என்­பது யாரா­லும் மறைக்க முடி­யாத மாபெ­ரும் உண்மை ஆகும்.

34 ஆண்­டு­க­ளுக்கு முன் ஜெய­ல­லிதா ஆட்சி காலத்­தில் சித்­தேரி மலை­யில் சிதைக்­கப்­பட்­டார்­கள் பெண்­கள். இது பற்றி மார்க்­சிஸ்ட் தலை­வர் நல்­ல­சி­வன் அவர்­கள் சட்­ட­மன்­றத்­தில் கேட்­ட­போது, ‘வய­தானநீங்­கள் அந்த மலைக்கு எப்­படி போய் பார்த்­தீர்­கள்?’ என்று கேட்­ட­வர்­தான் இன்று சண்­மு­கம் ஆத­ரிக்­கும் ஆட்­சி­யின் மையப்­புள்­ளி­யான செங்­கோட்­டை­யன். ‘அது மலைக்­கி­ரா­மம் அல்ல, மலை­ய­டி­வா­ரத்­தில் இருக்­கும் கிரா­மம் ‘ என்று செங்­கோட்­டை­யன் மண்­டை­யில் அன்றே கொட்­டி­னார் நல்­ல­சி­வன்.

பாதிக்­கப்­பட்ட பெண்­கள் கோவை சி.பி.ஐ. நீதி­மன்­றத்­துக்கு அடை­யாள அணி­வ­குப்­பு­க்காக வந்த போது அவர்­களை மிரட்ட பய­ணி­கள் விடு­தி­யில் தங்கிஇருந்­த­வர் தான் செங்­கோட்­டை­யன்.

‘என்­னை­யும் அரூர் அண்­ணா­ம­லை­யை­யும் ஆக்­சி­டெண்ட் ஆக்கி கதையை முடிங்­கப்பா என்று செங்­கோட்­டை­யன் சொன்­னார்’என்று பெ.சண்­மு­கம் சமீ­பத்­தில் கம்­பீ­ர­மான பேட்­டியே கொடுத்­தார். அப்­படி துணிச்­ச­லாக வாச்­சாத்தி பெண்­க­ளின் உரி­மையை நிலை­நாட்­டிய சண்­மு­கம், செங்­கோட்­டை­யன் அமைச்­சர் ஆக ஆத­ரித்­த­து­தான் 2026 தேர்­த­லின் புதிய சூழ்­நிலை ஆகும். இரு­வ­ரும் கைகோத்து நடந்து போனது கண்­கொள்­ளாக் காட்­சி­யா­கும். பெ.சண்­மு­க­மும் செங்­கோட்­டை­ய­னும் ஒரே நேர்­கோட்­டுக்கு வந்­துள்­ளது தான் இன்­றைய புதிய அர­சி­யல் சூழ்­நிலை ஆகும்.

விஜய் மத ரீதி­யாக தேர்­தல் பரப்­புரை செய்­த­போது அவர் மீது தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சொன்­ன­வர் பெ.சண்­மு­கம். விஜய் மீது வரு­மான வரி வழக்கு வந்த போது, ‘அவர் மீது கிரி­மி­னல் வழக்கு பதிய வேண்­டும்’ என்று சொன்­ன­வ­ரும் அவரே. இதை­யெல்­லாம் அவர் மறந்­தி­ருக்­க­லாம். உண்­மை­யான மார்க்­சிஸ்ட்­டு­கள் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

குறைந்­த­பட்­சம் த.வெ.க. ஆட்­சியை ஆத­ரிக்க, வெளிப்­ப­டை­யான உறு­தி­மொ­ழி­க­ளைக் கேட்­டுப் பெற்­றாரா சண்­மு­கம்? மேடைப் பேச்­சு­கள் அல்ல, எழுத்­துப் பூர்­வ­மான உறு­தி­மொ­ழி­கள் வாங்­கப் பட்­டதா? இவை எது­மில்­லா­மல் த.வெ.க.ஆட்­சியை ஆத­ரிக்க என்ன நெருக்­கடி அவ­ருக்கு? திரா­விட இயக்க வெறுப்பு மட்­டும் தான்.

அப்­ப­டி­யா­னால் அந்த உண்­மை­யான நோக்­கத்­தைச் சொல்லி அர­சி­யல் நடத்­துங்­கள். ஜனா­தி­பதி ஆட்சி வந்­து­வி­டும் என்று சொல்லி ‘கரூர் பலி­பீட’ வெகு­ஜன விரோதி ஆட்­சியை ஆத­ரிக்­கத் தேவை­யில்லை. இவ்வாறு ப. திருமாவேலன் எழுதி உள்ளார்.

இந்த கட்டுரை நாளையும் தொடரும் என முரசொலியில் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share