பாமக நிறுவனர் ராமதாஸின் திருமண நாள் இன்று (ஜூன் 24) தைலாபுரம் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமதாஸுக்கும் பாமக நிறுவனர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு உண்டாகி கட்சியே இரண்டாக பிளவுபட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்தது.
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவரை நேரில் பார்க்காமல் இருந்து வந்தார் அன்புமணி. ராமதாஸை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று கூறினார்.
அதுபோன்று மகனே தந்தையை உளவு பார்க்கிறார் … இதெல்லாம் வேறு எங்கேயாவது நடக்குமா என்று குற்றம்சாட்டிய ராமதாஸ், காவல்துறையிலும் புகார் அளித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு பிரிவும் தனி தனியாக தேர்தலை எதிர்கொண்டது.
இதில் அன்புமணி தரப்பு பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது. ராமதாஸ் மருமகளும் அன்புமணியின் மனைவியுமான சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். ராமதாஸ் தரப்பில் யாரும் வெற்றி பெறவில்லை.
இந்தசூழலில் ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியினர் இன்று தங்களது 63ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

இதையொட்டி தாய் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக தனது மனைவி, மகள்கள், பேத்திகளுடன் தைலாபுரம் இல்லத்துக்கு வருகைத் தந்தார் அன்புமணி.

அப்போது தன்னிடம் ஆசி பெற்ற மகனை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார் ராமதாஸ். தொடர்ந்து சவுமியா அன்புமணி மற்றும் பேத்திகளும் ஆசி பெற்றனர்.

கொள்ளு பேத்திகளை கொஞ்சி மகிழ்ந்தார் ராமதாஸ்.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது தந்தையை சந்தித்தது பற்றி அன்புமணி கூறுகையில், அப்பா, அம்மாவுடைய திருமண நாள். குடும்பத்துடன் சென்று அவர்களுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டோம். இனி நல்லது நடக்கும் என்றார்.

அரசியல் கேள்விகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இனி நல்லது நடக்கும் என மட்டும் பதிலளித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தைக்கும் மகனுக்கு இடையே நீடித்து வந்த மோதல் போக்கும் மனக்கசப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த குடும்ப நிகழ்வில் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியும் கலந்துகொண்டார்.
