அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாஃபர் சேட் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலங்களை முறைகேடாக ஒதுக்கியதாக 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெரியசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (டிவிஏசி) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றம் 2025 ஏப்ரல் 4ஆம் தேதி ரத்து செய்தது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் ஐ.பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், “மூல வழக்கிலேயே குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அதன் அடிப்படையில் பதியப்பட்ட அமலாக்கத் துறையின் வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ். தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து இன்று (ஏப்ரல் 28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
