ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்.. ஜாமியா மில்லியா பல்கலை வளாகத்தில் பரபரப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

jamiya

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க, தில்லி காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) ஜாமியா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-வது ஆண்டைக் குறிக்கும் ‘யுவ கும்பம்’ (Yuva Kumbh) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது மாணவர்களை நேரடியாகத் தூண்டிவிடும் செயல். சிறுபான்மையின மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இது அச்சுறுத்தலாக அமையும்” என்று மாணவர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது முறையற்றது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதால் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share