தூத்துக்குடியில் கடலோரப் பகுதியில் சுழற்காற்று ஒன்று உருவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இன்று ஜூன் 21-ந் தேதி மேகங்களிலிருந்து நிலத்தை நோக்கி சுழற் காற்று சீறியது. இது பார்ப்பதற்கு புனல் வடிவில் நீண்டிருந்தது. கடலோரப் பகுதிகளில் இத்தகைய சுழற்காற்றுகள் உருவாவதை ‘நீர்க்கூம்பு’ (Waterspout) என்கின்றனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பார்த்தனர்.
பொதுவாக இத்தகைய சிறிய அளவிலான சுழற் காற்றுகள், ”வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிகக் குறுகிய காலத்திற்கே நீடிக்கும்” என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
இதனை ஆங்கிலத்தில் “Tornado” எனவும் குறிப்பிடுகின்றனர். உண்மையில் Tornado என்பது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுழற் காற்று. தூத்துக்குடியில் இன்று பொதுமக்கள் பார்த்தது, Tornado-ன் மிக மிக சிறிய வடிவம். இது பேரபாயத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.
அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படக் கூடிய டோர்னாடோக்கள் (Tornados) நிலப்பரப்பில் நீண்ட தொலைவில் பயணித்து அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் தூத்துக்குடியில் உருவான சுழற்காற்று வளிமண்டல வெப்பச்சலனத்தால் ஏற்பட்டு, மிகக் குறுகிய காலமே நீடித்த ஒரு இயற்கை நிகழ்வாகும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
