திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர், 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், 23 நபர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 24 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்விபத்து குறித்து இயக்குநர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, கூடுதல் இயக்குநர் பொது சுகாதார துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்-செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட விசாரணை அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணை அறிக்கையினை 3 நாட்களுக்குள்ளாகவும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவர்களது உடலினை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கு அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் (ESI) திட்டம் / வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இனிவருங்காலங்களில், இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, பேரபாய தொழிற்சாலைகளை (Hazardous Industries) உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து நேரடியாக ஆய்வு செய்து தக்க மேல்நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவியினை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


