மத்திய பாஜக அரசுக்கு எதிராக களமிறங்கும் திமுக!

Published On:

| By Pandeeswari Gurusamy

மத்திய அரசின் நீட் தேர்வு, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து வரும் 23ம் தேதி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாசிச பா.ஜ.க. அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடிகள் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருகிறன. திமுக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகின்றனர். இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலையாகும். இத்தகைய நுழைவுத் தேர்வுகளையும் ‘தகுதி’த் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசினை தி.மு கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசு மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தாய்மொழியைத் துறக்கச் செய்து, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை மக்களிடையே திணித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே, தமிழ்நாட்டில் வடமொழித் திணிப்பை கல்வி நிலையங்களில் பாடத்திட்டம் வழியாகவும் இதர பல்வேறு வகைகளிலும் செய்து வருகிறது. தற்போது ஒன்றிய அரசுப் பள்ளிகளில் (CBSE) 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கற்க வேண்டும் எனும் திட்டத்தைச் செயல்படுத்திட ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

ADVERTISEMENT

எனவே, ஒன்றிய அரசின் இம்முயற்சிகளை தடுத்திட, கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி பா.ஜ.க. அரசின் நீட்தேர்வு மற்றும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகையிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகராம் சென்னை மாநகர், சைதையில் “கலைஞர் பொன்விழா வளைவு” அருகில், ஜூன் 23 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share