நீட் (NEET) தேர்வு அச்சத்தால் தருமபுரியைச் சேர்ந்த மாணவி ரோஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களில் நீட் தேர்வு அச்சத்தால் நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மாணவிகள் கோவை அனு கீர்த்தனா, சேலம் கோபிகா தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த மாணவி ரோஷினி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் எண்டபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷினி. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ரோஷினி, நாமக்கல்லில் இயங்கி வரும் நீட் தேர்வு மையத்தில் படித்து வந்தார். நீட் மறுதேர்வுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார் ரோஷினி.
இன்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் ரோஷினி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
