மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு (Delimitation) எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் (CM Vijay) இன்று ஆகஸ்ட் 12-ந் தேதி தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.


முதல்வர் விஜய் சட்டசபையில் இன்று முன்மொழிய இருக்கும் தீர்மானம்:
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 2026-இல் பாராளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.
இந்த நிலையில் மீண்டும் மேற்குறிப்பிட்ட அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.

எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை : மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.
i. நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
ii. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
iii. வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் விஜய் சட்டசபையில் நாளை தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.
முதல்வர் விஜய் ஆட்சியில் தீர்மானங்கள்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. தற்போது வரை மொத்தம் 4 முக்கிய தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானம் சட்டசபையில்ஆகஸ்ட் 7-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் மாநிலப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஆகஸ்ட் 10-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
- நீட் தேர்வு முறையை அகற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆகஸ்ட்
11-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - மத்திய அரசின் FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 11-ந் தேதி நிறைவேறியது.
