”சட்டசபை கூட்டத்தை மாலையில் நடத்தலாம் என முடிவெடுத்தோம்.. ஆனால் மாலையில் நடத்தினால் சிலருக்கு சிரமம்” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்கு வந்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்த முறை உறுப்பினர்கள் பேசுகிற போது சற்று அதிகமான நேரத்தையும் வாய்ப்பையும் நான் கொடுத்ததற்கான காரணமே முதல்முறையாக வந்திருக்கின்றார்கள்.. அவர்களும் பேச வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இருக்கும்.. தொகுதிகளில் நிறைய பிரச்சினைகளும் இருக்கும்.. அதற்காக இந்த முதல் கூட்டத்தொடரில் வாய்ப்பு தரவேண்டும் என்று நான் விரும்பினேன்.
ஆனால் இப்போது இருக்கிற நிலைமையைப் பார்த்தால், நம்முடைய அனைவருடைய உடல்நலத்தை பற்றி நான் கவலைப்படுகிறேன்.
நாம் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசியிருக்கிறோம்.. தேவைப்பட்டால் மாலை நேரத்தில் சட்டசபை கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று.. சில பேருக்கு மாலை நேரத்தில் வைத்தால் சிரமமாக இருக்கும் என்பதற்காக ஒரே அமர்வாக முடித்து விடலாம் என்றுதான் முடிவு செய்தோம்.
பொதுவாக முன்பு நடந்த சட்டமன்ற கூட்டங்களில், ஒரு உறுப்பினரை 7 நிமிடம் அல்லது 10 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்க மாட்டார்கள். இப்போது 15 நிமிடம், 20 நிமிடம், 25, 30 நிமிடங்கள் கூட அனுமதிக்கப்படுகிறது.
இது முதல் கூட்ட தொடராக இருக்கிற காரணத்தினாலே குறுக்கீடுகளும் கொஞ்சம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கின்றன.
அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்ப்பதுதான் நம்முடைய நேரத்தை முறையாக சரியாக பயன்படுத்துவதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
ஆகஸ்ட் 17-ந் தேதி தேதி சட்டசபை கூடுகிற போது உறுப்பினர்கள் 10 நிமிடத்திற்கு உள்ளாக பேசுவதற்கு மட்டும்தான் நான் அனுமதிப்பேன். 10 நிமிடத்திற்கு பிறகு அடுத்த உறுப்பினரை அழைத்து விடுவேன். அதற்காக யாரும் சங்கடப்படக்கூடாது.
அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
