பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றது செல்லாது என்று தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும், சொத்து மற்றும் வழக்கு விவரங்களை முறையாகத் தெரிவிக்கவில்லை என்றும் கூறி, அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் இன்று (ஜூலை 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு இதுவரை நீதிமன்ற நோட்டீஸ் சென்று சேரவில்லை என்று ஆர்.டி. சேகர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மீண்டும் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.
