நாட்டை உலுக்கி வரும் நீட் வினாத்தாள் மோசடி விவகாரம், டெல்லி போராட்டங்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கலைத்துள்ளார்.
நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. டெல்லியில் நேற்று காக்ரோச் ஜனதா கட்சியினர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தியதால் தலைநகரமே போர்க்களமானது.
காக்ரோச் ஜனதா கட்சியினரின் முற்றுகை பேரணியை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்; கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சி எம்பி டிம்பிள் யாதவ், காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று ஜூலை 21-ந் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘நீட் வினாத்தாளை கசியவிட்டது மிகப் பெரிய பாவச் செயல்’ என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, “நீட் தேர்வு குறித்து பிரதமர் பேசுகையில், நாங்கள் மாணவர்களுடன் நிற்கிறோம். வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். வினாத்தாள் கசிவு என்பது தேசிய கவலைக்குரிய ஒரு விவகாரமாகும், அதை அரசியலாக்கக் கூடாது. மையம் மட்டுமல்லாமல், எங்கு வினாத்தாள் கசிவு நடந்தாலும் அந்தந்த மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி எங்கள் அனைவருக்கும் வழிகாட்டினார்… இது மிகவும் ஆக்கபூர்வமான கூட்டமாக இருந்தது. பல முக்கியமான பிரச்சினைகளைக் குறிப்பிட்டு பிரதமர் தனது வழிகாட்டுதலை வழங்கினார் என்றார்.
