அதிமுக – திமுக கூட்டணி என்பது எந்தச் சூழலிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்றும், கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குதிரைப் பேரம் நடத்துவதற்கே இதைப் ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் இன்று (ஜூலை 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “அதிமுக – திமுக கூட்டணி குறித்து ஒரு புரளி கிளப்பப்படுகிறது என கட்சியின் பொதுச்செயலாளர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். எந்த நிலையிலும் அதிமுக, திமுக கூட்டணி என்பது சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்.
திமுக தரப்பில் அதிமுகவை ஆதரிக்க முன்வந்தது உண்மைதான். உதயநிதியே அதைச் செய்தார் என்று பொதுச்செயலாளரும் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமா? சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்தில் இது பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அவர்களின் ஆதரவை ஏற்று அதிமுக இயங்கும் என யாருமே சொல்லவில்லை.
இது முற்றிலும் புரளி. கட்சியிலிருந்து வெளியேறுவதற்கும், குதிரைப் பேரம் நடத்துவதற்கும் தான் இதை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி உள்ளோம்.
ராஜேந்திர பாலாஜி கூறிய ஒரு சாதாரண விஷயத்தைத் திரித்துப் பேசி, அவரை ‘புரோக்கர் வேலை பார்க்கிறார்’ என அமைச்சர் கூறியிருப்பது மிகவும் தவறான பேச்சு. இதன் மூலம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்த கட்சி தீர்ந்த சக்தி ஆக வேண்டும் என அவர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
