சீனாவில் இருக்கும் கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேறுமாறு சீனா அரசு உத்தரவிட்டிருக்கும் விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. .
2020 ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லையில் நடந்த சண்டையின் காரணமாக சீனா – இந்தியா இடையேயான உறவு பதற்றமாகவே தொடர்கிறது.
ஆனால், சீனா அரசு அந்தப் பிரச்சினையைப் புறந்தள்ளி, வர்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க முயன்றாலும், எல்லைப் பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியா – சீனா இடையேயான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்தியாளர்கள் நான்கு பேரை, சீனாவுக்கு செய்தி சேகரிப்பு பணிகளுக்காக அனுப்பி வைத்திருந்தன.
இதில் கடந்த ஏப்ரலில், பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தி இந்து நாளிதழின் இரண்டு பத்திரிகையாளர்களின் விசாவைப் புதுப்பிக்க சீனா அரசு மறுத்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் உள்ளிட்ட மூன்று நிருபர்கள் சீனாவிலிருந்து வெளியேறிவிட்டனர்.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிருபர் மட்டும் அங்கேயே இருந்தார்.
இதற்கிடையே இறுதியாக சீனாவில் இருந்த கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும், இந்த மாத இறுதிக்குள் சீனாவிலிருந்து வெளியேறுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக, ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,
“இந்தியாவில் ஒரு சீனப் பத்திரிகையாளர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். அவரும் தன்னுடைய விசா புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கான விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு மறுத்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்
இப்படி விசா புதுப்பிக்காமல் சீன பத்திரிகையாளர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்ததற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சீனாவிலிருந்து இந்தியப் பத்திரிகையாளர் வெளியேற்றப்படும் விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அந்த கடைசிப் பத்திரிகையாளரும் வெளியேறும்பட்சத்தில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள எஞ்சிய ஒரே ஒரு சீன பத்திரிகையாளரின் விசா புதுப்பிப்பை இந்தியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரிகையாளர்கள் அனுமதி விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
“ரத்தத்தை கொட்டியாவது கலைஞருக்கு பேனா சிலை அமைப்போம்” – ஜெகத்ரட்சகன்
மருத்துவ பொது கலந்தாய்வு: மத்திய அமைச்சரை சந்திக்கும் மா.சுப்பிரமணியன்