தமிழக முதல்வர் விஜய் 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஜூன் 10) தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நாளை காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காகவே முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றுள்ளார். இன்று இரவு அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
நாளை காலை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர், நாளை இரவு 7 மணி அளவில் பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்திலும் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இத்துடன் நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் 12-ஆம் தேதி காலையில் மத்திய அமைச்சர்கள் சிலரை முதல்வர் விஜய் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகல் 3 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.
இந்த டெல்லி பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
