இன்று (ஆகஸ்ட் 26) அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் சந்தித்துப் பேசிய நிலையில், அவருக்காகப் பன்னீர் ஹோட்டலில் காத்திருந்தது தெரியவந்துள்ளது.
ஒற்றைத் தலைமை , சட்டப் போராட்டம் என அடுத்தடுத்து பரபரப்பாகவே இருக்கிறது அதிமுக.
பொதுக்குழு வழக்கில் பன்னீருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பன்னீரைச் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், நடிகர் பாக்யராஜ் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேச விரும்பியிருக்கிறார். ஓபிஎஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ‘நான் வந்து ஒருங்கிணைப்பாளரை சந்திக்கிறேன்’ என தகவல் தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘தலைவர் எப்போது வருவார். அவர் வருவதற்கு முன்னதாக நான் அங்கிருக்க வேண்டும். நான் வந்து காத்திருக்கிறேன்” என்று கேட்டுள்ளார் பாக்யராஜ்.
இதை அறிந்த பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு நான் வந்த பிறகு அவரை வர சொல்லுங்க. அவர் எனக்காகக் காத்திருக்கக் கூடாது.
நான் முதலில் ஹோட்டலுக்கு வந்துவிடுகிறேன். பிறகு பாக்யராஜை வர சொல்லுங்க’ என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் பாக்யராஜிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாலை 4.45 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பன்னீர் செல்வம் வந்துள்ளார். இதையடுத்து,
உடனடியாக பாக்யராஜும் கிளம்பி வந்து பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பன்னீரிடம், “நான் தான் உங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தீர்கள்” என்று பாக்யராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பன்னீர் செல்வம், “நீங்கள் எம்.ஜி.ஆர் அவர்களால் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர்.
அவரோடு நெருங்கிப் பழகியவர். உங்களுக்காக நாங்கள்தான் காத்திருக்க வேண்டுமே தவிர எங்களுக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாது” என்று கூறினார்.
இந்த பதிலைக் கேட்டு பாக்யராஜ் நெகிழ்ந்துபோனார் என்கிறார்கள் அவர்களுடன் இருந்த நிர்வாகிகள்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று பன்னீர் நினைக்கிறார் என பாக்யராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
பொள்ளாச்சி பொதுக்கூட்டம்: திமுகவில் இணைந்த அதிமுக, பாஜகவினர்!