முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று ஜூலை 20-ந் தேதி அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு என்ன?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 18-ந் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., “மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். சட்டமன்றத்துக்குள்ள வச்சுப் பார்த்துக்கிறோம். நாங்க என்னவோ கோமாளிப் பயலா நெனச்சுக்கிட்டு இருக்கிற? சட்டமன்றத்தைப் பூட்டுனா உனக்கு எலும்பு இருக்காது, உடைச்சிட்டுத்தான் உன்னை நாங்க அனுப்பி விடுவோம். பூட்டிப் பாரு சட்டமன்றத்தை, யாரு ஓடுனது?” என ஒருமையில் பேசினார் என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் இன்று அதிகாலை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். ஆனால் அவரை கைது செய்து அழைத்து செல்ல விடாமல் திமுகவினர் போலீசார் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தற்போது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுக எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் இதேபோல முதல்வர் விஜய்யை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனிமொழி கண்டனம்
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கன்மொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்” என எச்சரித்துள்ளார். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
