தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று (ஜூலை 12) மாலை நடைபெற உள்ளது.
இளைஞர்களை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளர்.
‘போதையில்லா பொள்ளாச்சி’ விழிப்புணர்வு
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், இளைஞர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாநாட்டிற்கு “போதையில்லா பொள்ளாச்சி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகள்?
அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த முதல் மாநாட்டில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை இந்த அமைப்பு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்த சில முக்கிய அறிவிப்புகளை அண்ணாமலை இந்த மேடையில் வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
குவியும் தொண்டர்கள்
இன்று மாலை நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு மாநாட்டிற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்ணாமலையின் ஆதரவாளர்களும், இளைஞர்களும் மாநாட்டு பந்தலை நோக்கி காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர்.
