சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி கூட்டணிகட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் இன்று (ஏப்ரல் 19) மத்திய உள்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சிலை வரை ரோட் ஷோ நடத்தினார். அப்போது மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, “தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகம் இழந்த பெருமைகள் மீட்டெடுக்கப்படும். தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள சட்டம் ஒழுங்கை மாற்றி, சிறப்பான நிலைக்கு புதிய அரசு கொண்டு வரும்.
தி.மு.க. ஆட்சியில் நடக்கும் ஊழல்கள், லஞ்சங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் கருணாநிதி, அவருடைய மகன் ஸ்டாலின், அதன் பின்னர் அவருடைய மகன் என குடும்ப அரசியல் தொடர்கிறது.
ஸ்டாலின், அவருடைய மகன் ஆட்சிக்கு வர வேண்டும் என பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தனது மகனை முதல்வராக்குவதுதான் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என்றார்.
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு உரிமையை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நிறைவேற்ற விடவில்லை. மகளிருக்கு கிடைக்க வேண்டிய இந்த அரிய வாய்ப்பை திமுகவும், காங்கிரஸும் தடுத்துவிட்டன. இந்தச் சதிச் செயலை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேறும் என்றார்.
