அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது எஸ்பி வேலுமணி அணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் இன்று மே 19-ந் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்தக் கூட்டம் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்தில் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் திடீரென அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ”அதிமுகவின் 87 மாவட்ட செயலாளர்களில் 80-க்கும் மேற்பட்டோர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றுமை குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது பற்றி விவாதிக்கவில்லை” என்றார்.
அதிமுகவின் 80-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றது எஸ்பி வேலுமணி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
