ஓமன் வளைகுடா பகுதியில் இந்திய மாலுமிகள் பணியாற்றும் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா (US) தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2 கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், தற்போது ‘எம்.டி. ஜல்வீர்’ (MT Jalveer) கப்பல் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பயணித்த 20 இந்திய மாலுமிகள் (Indian Sailors) கதி என்ன? என்பது தெரியவில்லை.


- ஓமன் கடற்பரப்பில் ஜூன் 8-ந் தேதியன்று எம்.டி. மேரிவக்ஸ்’ (MT Marivex) கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதில் பயணித்த 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
- இதனைத் தொடர்ந்து ‘எம்.டி. செட்டபெல்லோ’ (MT Settebello) கப்பல் மீது ஜூன் 9-ந் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர். ஆனால் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அமெரிக்கா தூதர அதிகாரிகளை நேரில் வரவழைத்து நேற்று மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
- இந்த நிலையில் தற்போது 3-வதாக ‘எம்.டி. ஜல்வீர்’ கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலில் பயணித்த 20 இந்திய மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளச் செய்தியில், “இன்று காலை ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அப்பால் ஒரு கப்பல் தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்து அறிந்தோம். நாங்கள் நிலைமையை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் (US) தாக்குதல்- பின்னனி என்ன?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு குறுகிய கடல் பாதையாகும். இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். உலக அளவில் தினசரி நுகரப்படும் கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்த வழியாகவே கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதி சர்வதேசப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கிறது.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரானில் இருந்து கப்பல் வெளியேறுவது அல்லது ஈரானுக்குள் செல்வதை அமெரிக்கா எதிர்க்கிறது.
இதனால் : அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US Central Command) ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரமாக்கியது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி ஈரானின் கச்சா எண்ணெயைச் ஏற்றிச் செல்லும் கப்பல்களைக் கண்டறிந்து, அவற்றை அமெரிக்கப் படைகள் தாக்குவதாகவோ அல்லது தடுத்து நிறுத்துவதாகவோ கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தற்போதைய புதிய தாக்குதலில் 20 இந்திய மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் அமெரிக்கா- இந்தியா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
