டீசல் ஏற்றுமதி மீதான எதிர்பாராத வருவாய் வரியை (windfall tax) 2026 மே 1 முதல் லிட்டருக்கு 23 ரூபாயாக அரசு குறைத்துள்ளது. விமான எரிபொருள் (ATF) மீதான வரி லிட்டருக்கு 33 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி பூஜ்ஜியமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது விதிக்கப்படும் கலால் வரி மாற்றமின்றி தொடரும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி, முன்பு லிட்டருக்கு 55.5 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் (ATF) மீதான வரி லிட்டருக்கு 42 ரூபாயில் இருந்து 33 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் ஏற்றுமதி மீதான சாலை மற்றும் மேம்பாட்டு வரி (cess) மே 1 முதல் அடுத்த 15 நாட்களுக்கு பூஜ்ஜியமாக வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 அன்று, டீசல் மீது லிட்டருக்கு ரூ. 21.50 மற்றும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.29.5 ஏற்றுமதி வரிகளை அரசு விதித்தது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்த ஆய்வில் இந்த வரிகள் ரூ. 55.5 மற்றும் ரூ. 42 ஆக உயர்த்தப்பட்டன.
ஏன் வரி விதிக்கப்பட்டது?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரின் போது, நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் இந்த வரியை விதித்தது. எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உலகளாவிய விலை வேறுபாட்டைச் சுரண்டுவதைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது. போர் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. இது ஈரானைப் பதிலடி கொடுக்கத் தூண்டியது.
போருக்கு முன்பு ஒரு பீப்பாய் சுமார் 73 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இதனால் ஒரு பீப்பாய் கிட்டத்தட்ட 126 டாலராக உயர்ந்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஏற்றுமதியைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைப் பராமரிக்க இந்த வரி விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.
