மழை (Rainfall) என்பது வெறும் பருவகால மாற்றம் மட்டுமல்ல, அது முழுப் பொருளாதாரத்தையும் இயக்கும் ஒரு முக்கிய காரணியாகும். வரும் நாட்களில் உங்கள் குடும்பத்தின் காய்கறிச் செலவு திடீரென அதிகரித்தால் அதற்கு மழையே காரணமாக இருக்கும். நமது பொருளாதாரத்தின் பெரும்பகுதி இன்றும் விவசாயத்தையே சார்ந்துள்ளது. நல்ல மழை என்பது செழிப்பான அறுவடை, கிராமப்புறங்களில் சிறந்த வருமானம் மற்றும் நிலையான உணவு விலைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இருப்பினும், பருவமழை பலவீனமடைந்தால் அதன் நேரடித் தாக்கம் விலையுயர்ந்த காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்கள் வடிவில் நம் வீட்டு சமையலறையில் எதிரொலிக்கும். தற்போதைக்கு பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இல்லை என்றாலும், அது மெதுவாக மேல்நோக்கிச் செல்கிறது. சில்லறைப் பணவீக்கம் (நுகர்வோர் விலைக் குறியீடு) பிப்ரவரியில் 3.21% ஆக இருந்த நிலையில், மார்ச் மாதம் 3.4% ஆக உயர்ந்தது.
புதிய 2024 அடிப்படை ஆண்டின்படி, இது தொடர்ச்சியாக மூன்றாவது மாத உயர்வாகும். இந்த ஆண்டு ஒட்டுமொத்த பணவீக்கம் உயரும் என்றும், இந்த அழுத்தத்திற்கு வானிலையும் பங்களிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் கவலைக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், வானிலை ஆய்வுத் துறையின் (IMD) சமீபத்திய முன்னறிவிப்பு ஆகும். 2026ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்று IMD கணித்துள்ளது.
மேலும், எல் நினோவின் அச்சுறுத்தலும் விவாதங்களின் மையத்திற்கு வந்துள்ளது. இது பசிபிக் பெருங்கடல் அசாதாரணமாக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு பருவகால மாற்றமாகும். இது ஆசியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி மற்றும் கடுமையான வெப்பத்தை ஏற்படுத்துகிறது. 1980ஆம் ஆண்டு முதல், எல் நினோ நிகழ்ந்த ஆண்டுகளில் இந்தியா இயல்பை விடக் குறைவான மழையைப் பெற்றுள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.
எல் நினோவின் விளைவுகள் மே-ஜூன் மாதங்களில் தெரியத் தொடங்கும் என்றும், ஆண்டின் இறுதியில் கணிசமாக வலுப்பெறக்கூடும் என்றும் உலகளாவிய ஏஜென்சிகல் கூறியுள்ளன. ICRA தரமதிப்பீட்டு நிறுவனத்தின்படி, கடந்த 25 ஆண்டுகளில் இது மிகவும் பலவீனமான ஆரம்ப மதிப்பீடுகளில் ஒன்றாகும். மழைப்பொழிவு குறைவாக இருந்தால், 2027 நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 4.5%ஐத் தாண்டக்கூடும் என்றும், விவசாய வளர்ச்சி 3% என்ற அடிப்படை அளவிற்குக் கீழே சரியக்கூடும் என்றும் அந்த மதிப்பிடப்பட்டுள்ளது.
