திருச்சி கிழக்கு (Trichy East) தொகுதி இடைத் தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடுவது குறித்த கேள்விக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் (Ku. Pa. Krishnan) பதில் அளித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளில் சிலர் இன்று மே 18-ந் தேதி கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கு.ப.கிருஷ்ணன் அளித்த பதில்
கிழக்கு தொகுதி என்பது விஜய் தொகுதி. அவர் நின்று வென்ற தொகுதி. ஒருவர் இரண்டு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக இருக்க இயலாது என்பது விதி. அதன் அடிப்படையில் கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார். 6 மாதத்துக்குள் தேர்தல் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த இடைத்தேர்தல் வருகின்ற பொழுது விஜய் யாரை நிறுத்தினாலும், வெற்றி பெறச் செய்வோம். இன்னைக்கு வந்திருக்கக்கூடிய இங்க எல்லாருமே கிழக்கு தொகுதி. அதனால, நாங்க வந்து கடுமையான வேலை பார்ப்போம். யார் இருந்தாலும் கவலையில்லை எங்களுக்கு. எங்கள் தளபதியினுடைய கொடி கிழக்கிலே பறக்கும். இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
கு.ப.கிருஷ்ணன் மகனுக்கு சீட்?
சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன், 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டினிடம் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது மகனுக்கு கு.ப.கிருஷ்ணன் சீட் கேட்பதாக நமது மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம். தற்போது திருச்சி கிழக்கு தொகுதியை மையமாக வைத்து களப் பணிகளை கு.ப.கிருஷ்ணன் தொடங்கி உள்ளது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட உள்ளார். அதற்கான களப் பணிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து வருவதாகவும் நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
