தமிழக சட்டசபை தேர்தலில் திமுக (DMK) தோல்வி அடைந்தது தொடர்பாக அதன் வியூக வகுப்பு அமைப்பான PEN-ன் நிறுவனர் சபரீசன் வேதமூர்த்தி (Sabarisan) விளக்கம் அளித்துள்ளார்.

PEN நிறுவனத்தின் அறிக்கை:
பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (Populus Empowerment Network (PEN) 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து டிஜிட்டல் தளங்களில் பரவி வரும் பலதரப்பட்ட கருத்துக்களை கவனித்து வருகிறது. இவற்றை பொறுப்புடனும் தெளிவுடனும் பரிசீலிப்பதும், இவற்றிலிருந்து கற்றுக் கொள்வதும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மக்களின் தீர்ப்பை நாங்கள் மிகவும் பணிவுடன் மதிக்கிறோம். ஜனநாயகத்தில் தேர்தல்கள் என்பவை அரசியல், சமூகம் உள்ளிட்ட காரணங்களால் வடிவமைக்கப்படுகின்றன.
இந்தத் தருணத்தில், எங்கள் கவனம் யாரையும் குறை கூறுவதிலோ அல்லது யூகங்களிலோ இல்லை; மாறாகக் கேட்பது, கற்றுக்கொள்வது மற்றும் அதில் இருந்து மேம்படுத்திக் கொள்வதில் மட்டுமே உள்ளது.
கட்சி (திமுக) நிர்வாகிகள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் உண்மையான கருத்துக்கள், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
.
இருப்பினும், ஆரோக்கியமான ஜனநாயக விவாதத்தைத் திசைதிருப்பும் வகையிலான தவறான தகவல்கள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் சரிபார்க்கப்படாத வதந்திகளைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
PEN நிறுவனர் சபரீசன் (SABARISAN) அறிக்கை:
கடந்த சில நாட்களாக, சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கான பெரும் பொறுப்பை PEN அமைப்பின் மீதும் அதன் செயல்பாட்டின் மீதும் சுமத்துவதற்கான பல முயற்சிகளை நான் கவனித்து வருகிறேன்.
ஜனநாயகத்தில் விமர்சனங்களும் பொதுமக்களின் ஆய்வுகளும் இயல்பானவை; வரவேற்கத்தக்கவை. எனினும் பெரிய அரசியல் முடிவை ஒரே ஒரு கருத்திற்குள் சுருக்கிப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் அது யதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லை.
PEN நிறுவனமானது, தகவல் தொடர்புகளை வலுப்படுத்துதல், டிஜிட்டல் முறையில் மக்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் அரசியல் ஈடுபாட்டிற்குள் நவீன பரப்புரை முறைகளைக் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுடன் தான் உருவாக்கப்பட்டது.
எங்களது PEN டீம் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் ஜனநாயகப் பங்களிப்பின் மீதான நம்பிக்கையாலானவை.
கட்சி (திமுக) நிர்வாகிகள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.
விமர்சனங்களை- கருத்துகளை நேர்மையுடன் ஏற்றுக்கொள்வதிலும், எங்களை மேம்படுத்திக் கொள்வதிலும் தான் வளர்ச்சி அடங்கியுள்ளது.
மக்களின் தீர்ப்பை கண்ணியத்துடனும் துணிவுடனும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான நமக்கான முன்னுதாரணம் நமது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், (தாம் தோற்கடிக்கப்பட்ட) கொளத்தூருக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், தேர்தல் முடிவை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிக்கையையும் வெளியிட்டார். நமது கட்சித் தலைவரின் இந்த செயல் நமது கட்சி மீதான உயரிய மதிப்பீடுகளையும் ஜனநாயக உணர்வையும் பணிவையும் வெளிப்படுத்துகிறது.
மு.க.ஸ்டாலின் வழியைப் பின்பற்றி, குறைகளை நேர்மையுடன் உள்வாங்கிக் கொண்டு முன்னோக்கிச் செல்ல PEN நிறுவனம் உறுதியளிக்கிறது.
மக்களின் தீர்ப்பை நான் எளிமையாகவும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
PEN டீம்-ன் கடின உழைப்பையும் நேர்மையையும் நான் பாராட்ட விரும்பும் அதே வேளையில், இந்தத் தேர்தல் முடிவுகளில் எனது பங்களிப்பு ஏதேனும் இருந்திருந்தால், அதற்கான எந்தவொரு பொறுப்பையும் ஏற்க நான் முழு மனதுடன் தயாராக இருக்கிறேன்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு, பொறுப்புணர்வுடனும் பணிவுடனும் நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இவ்வாறு சபரீசன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
