வைஃபை ஆன் செய்ததும், “கட்சிக் கொடியை மாத்துறீங்க ஒரே நிமிஷத்துல! பதவி மட்டும் நிரந்தரமா உங்க கணக்குல!”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
ப்ரோ உள்ள நுழையறப்பவே அமர்க்களமான நியூஸா?
யெஸ் ப்ரோ.. அண்ணா திமுகவில (AIADMK) இருந்து விஜய் ஆட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவா ஓட்டு போட்டாங்க இல்லையா? அவங்க 21 பேரோட எம்.எல்.ஏ. பதவி தப்பியிருச்சு.. இதுக்கு காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 21 பேரையும் மன்னிச்சுட்டதா சபாநாயகர்கிட்ட கடிதம் கொடுத்ததுதான்..

சிவி சண்முகமும் சி விஜயபாஸ்கரும் (Vijayabaskar)
இந்த 21 பேருல சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர் பேரும் இருக்குது.. ஆனா இந்த ரெண்டு பேர் மட்டும்தான் இன்னமும் எடப்பாடி பழனிசாமியை நேரில சந்திச்சு பேசாதவங்க..
சிவி சண்முகத்துக்கு சி விஜயபாஸ்கருக்கும் எடப்பாடியோட என்னதான் பிரச்சனை ப்ரோ?
சிவி சண்முகத்தைப் பொறுத்தவரைக்கும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துல எடப்பாடியை அடிக்க போனாரு.. எடப்பாடியும் பதிலுக்கு கையை ஓங்கிட்டாரு.. அதனால மறுபடியும் எடப்பாடி கூட சேர்ந்து இருக்க முடியாதுன்னு நினைக்கிறாரு..
ஆனா விஜயபாஸ்கர் விவகாரம் வேற.. எலக்ஷனுக்கு முன்னாடியே, ரொம்பவே நெருக்கடி கொடுத்து, ”நாமதான் ஆட்சி அமைப்போம்.. நம்ம ஆட்சியில உங்களுக்கு ரொம்பவே பவர்புல்லான அமைச்சர் பதவி தர்றேன்”னு சொல்லி அதிகமான தேர்தல் நிதியை வாங்கிட்டாராம் எடப்பாடி..
ஆனா களநிலவரம் களேபரமானதால எடப்பாடி மேல செம்ம கோபமும் அதிருப்தியுமா இருக்கிறார் விஜயபாஸ்கர்.. அதனால எடப்பாடியை விஜயபாஸ்கர் போய் பார்க்கலையாம்.
இதுமட்டுமில்ல.. எந்த ஒரு முடிவையும் சொல்லாமலேயே சிவி சண்முகம், விஜயபாஸ்கரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்னு கிளம்பினாங்க..
அதோட தன்னோட ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தொடர்ந்து ஆலோசனை நடத்தினாரு.. அப்ப, “நான் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன். எங்களுடைய தொகுதி மக்கள்… அவர்களின் உணர்வு எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நம்பிக்கையோடு வாக்களித்த அந்த மக்களுடைய கருத்துக்கள் ரொம்ப முக்கியம்”னு சொல்லிகிட்டு இருந்தாரு..
விஜயபாஸ்கரின் அடுத்த அதிரடி மூவ்
இப்ப விஜயபாஸ்கர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்காராம்.. இதை பத்தி விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சராகனும்னுதான் எஸ்பி வேலுமணி அணி முயற்சி செஞ்சாங்க.. அவங்களோட விஜயபாஸ்கரும் முக்கியமானவரா இருந்தாரு.. எஸ்பி வேலுமணி அணி கொறடாவாக விஜயபாஸ்கரைத்தான் பரிந்துரை செஞ்சாங்க.. ஆனா இப்ப எல்லாமே நிலைமை தலைகீழாகிடுச்சு..
அதிமுக எம்.எல்.ஏ.வா இருந்துகிட்டு விஜய் கேபினட்டுல அமைச்சராக முடியாதுங்கிறது உறுதியாகிடுச்சு..
சரி அடுத்து என்ன? ஏற்கனவே 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செஞ்சுட்டு தவெகவில இணைஞ்சாங்களே அதே மாதிரி நாமும் முடிவெடுக்கலாமா?ன்னு ஆலோசனை நடத்தினார் விஜயபாஸ்கர்..
தவெகவில் சேர்க்க எதிர்ப்பு
ஆனா விஜயபாஸ்கரை தவெகவில சேர்க்கவே கூடாதுன்னு சில அமைச்சர்கள் உட்பட புதுக்கோட்டை தவெக டீம் ரொம்பவே முட்டுக்கட்டையாக இருக்குது.. சிஎம் விஜய்யின் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியும் வழக்குகள் இருக்கிறதால விஜயபாஸ்கர் மாதிரியான மாஜி அமைச்சர்கள் வேண்டவே வேண்டாம்னு ஏற்கனவே சொல்லிட்டாரு..
அதனால தவெக பக்கம் விஜயபாஸ்கர் போகவே முடியாத நிலைமை வந்துருச்சு.. இந்த சூழ்நிலையிலதான் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிறார்..

திமுகவில் (DMK) இணைய முடிவு
ஆமாங்க.. இப்போதைக்கு விஜயபாஸ்கருக்கு இருக்கிற ஒரே ஆப்ஷன் திமுகதான்..
விஜய்பாஸ்கர் திமுக பக்கம் போகனும்னு இப்பதான் முடிவு எடுக்கிறாருன்னு நினைக்காதீங்க.. 2021-ல் திமுக ஆட்சி அமைச்சப்பவே அதுக்கான மூவ்களை விஜயபாஸ்கர் எடுத்தாரு.. ஆனா அது ஒர்க் அவுட் ஆகலை..
இப்ப எலக்ஷன் முடிஞ்ச பிறகு வந்த ரிப்போர்ட்டுகளைப் பார்க்கும் போது அதிமுகவால ஜெயிக்க முடியாது.. அதிமுக ஆட்சி அமைக்க முடியாதுன்னு யூகிச்சாரு விஜயபாஸ்கர்.. அதேநேரத்துல திமுகவில சேர்ந்த உடனே அமைச்சர் பதவி கொடுப்பாங்களான்னும் தெரியாது.. ஆனா ஒரு 5 வருஷம் திமுகவில உழைச்சா அடுத்து திமுக ஆட்சி அமைக்கும் போது நிச்சயம் அமைச்சராக முடியும்.. நமக்குதான் வயசு இருக்கேன்னு ’தொலைநோக்கு’ ஸ்கெட்ச் போட்டுதான் ஒவ்வொரு ஸ்டெப்பா மூவ் செஞ்சாரு விஜயபாஸ்கர்..
எலக்ஷன் ஓட்டுப் பதிவு முடிஞ்ச பிறகு ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வு எடுத்துகிட்டு இருந்தாரு இல்லையா? அங்கே, திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்துடும்னு நம்பிக்கையோட புதிய அமைச்சரவை பட்டியலும் கூட ரெடி செஞ்சுகிட்டு இருந்தாங்க..
அப்ப கொடைக்கானலில் இருந்த ஸ்டாலினை சந்திக்க போனார் அனிதா ராதாகிருஷ்ணன்.
அனிதா ராதாகிருஷ்ணன் லைனில் போய் ஸ்டாலின் கிட்ட பேசுன விஜயபாஸ்கர், “அண்ணே நான், திமுகவுக்கு வந்துடலாம்னு இருக்கேன்”ன்னு சிலபல காரணங்களையும் சொன்னாரு.. எல்லாத்தையும் கேட்டுகிட்ட ஸ்டாலின், பார்க்கலாம்னு மட்டும் சொல்லி இருந்தார்..
ஆனா எலக்ஷன் ரிசல்ட்தான் பெரும் பிரளயத்தையே உருவாக்கிடுச்சு.. அதனால்தான் தவெக பக்கம் மூவ் செஞ்சாரு.. அதுதான் இப்ப பெயிலர் ஆகிடுச்சே..”ன்னு சொல்றாங்க..
ப்ரோ.. என்ன ஸ்டேஜில் இருக்கிறார் விஜயபாஸ்கர்?
விஜயபாஸ்கரை தவெக கழற்றிவிட்டதால திமுக பக்கம் வருவாருன்னுதான் முன்னாள் அமைச்சர் ரகுபதி ரொம்பவே காட்டமாக அவரை விமர்சிச்சாரு.. “விஜயபாஸ்கரை ஸ்டாலின் திமுகவில் சேர்க்கமாட்டார்; அவரை பக்கத்தில் கூட அணுகவிடமாட்டார் ஸ்டாலின். விஜயபாஸ்கரை அதிமுகவும் தவெகவும் புறக்கணித்துவிட்டன. நடுரோட்டில் அனாதை போல் நிற்கிறார் விஜயபாஸ்கர்”னு ரகுபதி சொல்லி இருந்தாரு..
திமுகவோட புதுக்கோட்டை மாவட்ட தெற்கு செயலாளர் ரகுபதி.. அதனால இந்த விவகாரத்துல ரொம்பவே காட்டமா பேசியிருந்தார் ரகுபதி. .அதே மாதிரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மெய்யநாதனும் கூட விஜயபாஸ்கரை திமுகவில சேர்க்க கூடாதுன்னு முட்டுக்கட்டையா இருந்தாரு..
இப்ப என்னாச்சு ப்ரோ?
இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் விஜயபாஸ்கர் எடுத்த முடிவு.. என்ன நடந்தாலும் பரவாயில்லை.. திமுகவிலேயே சேர்ந்துடுவோம் அப்படிங்கிறதுதான்..
விஜயபாஸ்கருக்கு ஓகே சொன்ன ஸ்டாலின்
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிச்சப்ப, “ அனிதா ராதாகிருஷ்ணன் மூலமா விஜயபாஸ்கர் மறுபடியும் ஸ்டாலின்கிட்ட மூவ் செஞ்சாரு.. அதே நேரத்துல தனக்கு ரொம்பவே எதிர்ப்பா இருக்கிற ரகுபதி, மெய்யநாதனையும் ‘சிலர் மூலமா’ சமாதானப்படுத்தினாரு.. ஒவ்வொரு முட்டுக்கட்டையையும் கிளியர் செஞ்சதால விஜயபாஸ்கர் திமுகவில சேருவது உறுதியாகிடுச்சு..ஸ்டாலின் சைடுல இருந்தும் சிக்னல் கொடுத்தாச்சு..
விஜயபாஸ்கருக்கு திமுகவில் என்ன பதவி?
விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியோட திமுகவில சேர முடியாது.. அப்படி சேர்ந்தா தகுதி நீக்கம் செஞ்சுடுவாங்க.. அதனால எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு திமுகவில சேர இருக்கிறார்.. அப்படி பதவியை ராஜினாமா செஞ்சுட்டு வர்ற தனக்கு கட்சியில முக்கிய பதவி வேணும்னும் கேட்கிறாரு.. அதை பத்தியும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாரு..
விஜயபாஸ்கர் ஜெயிச்ச விராலிமலை தொகுதி, திமுகவோட புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துல வருது.. இங்க மா.செ.வா இருக்கிறவர் செல்லபாண்டியன்.. இந்த எலக்ஷன்ல விஜயபாஸ்கரை எதிர்த்து செல்லபாண்டியன்தான் போட்டியிட்டாரு.. ஆனா மா.செ.வான செல்லபாண்டியன் 3-வது இடத்துக்குதான் வர முடிஞ்சது..
விஜயபாஸ்கர் 1,05,773 வாக்குகள் வாங்கினாரு.. 2-வதா தவெக முருகேசன் 43,700 ஓட்டு வாங்கி இருந்தாரு.. 3-வதாக வந்த மா.செ. செல்லபாண்டியன், 40,397 ஓட்டுதான் வாங்கி இருந்தாரு.. விஜயபாஸ்கர் 62,073 வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்சார்..
இப்ப விஜயபாஸ்கர் திமுகவுக்குள்ள வர்றதால மா.செ.பொறுப்பில் இருந்து செல்லபாண்டியனை கழற்றிவிட்டுட்டு விஜயபாஸ்கரை மா.செ.வாக நியமிக்கலாம்னு ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார்..”ன்னு சொல்றாங்க..

சரி விஜயபாஸ்கர் எப்ப திமுகவில சேருவாராம் ப்ரோ?
விஜயபாஸ்கரை திமுகவில் சேர்க்கலாம்.. பதவி கொடுக்கலாம்னு முடிவு எடுத்த கொடுத்த ஸ்டாலின் அவரை ”எப்ப சேர்க்கிறது”? அப்படிங்கிறதுல ஒரு தயக்கத்துல இருக்கிறாராம்..
இதை பத்தி விசாரிப்ப, “ விஜய்யின் திருச்சி கிழக்கு, அதிமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செஞ்ச மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க போகுது.. இந்த பை எலக்ஷனை அதிமுக புறக்கணிக்க இருக்குது..
பை எலக்ஷன் களத்துல திமுகவும் தவெகவும்தான் மோதும்..
தவெகவுக்கு எதிராக திமுகவோட பிரசாரமே, “எலக்ஷன்ல ஓட்டுப் போட்ட மை கூட காயலை.. அதிமுக எம்.எல்.ஏக்களை ’குதிரை பேரம்’ நடத்தி வளைச்சு போட்டிருக்கு தவெக..”ன்னுதான் இருக்க போகுது..
அப்படியான நிலைமையில, விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைச்சு திமுகவில சேர்த்துகிட்டா, தவெக கவுண்ட்டருக்கு, “நீங்களும்தானே அதிமுக விஜயபாஸ்கரை வளைச்சு போட்டீங்க.. நீங்க என்ன ‘குதிரை பேரம்’ பேசுனீங்க?”ன்னு தவெக ரிவிட் அடிக்கும்.. அது திமுகவுக்கு ரொம்பவே செட் பேக்காக சான்ஸ் இருக்குன்னு ஸ்டாலின் நினைக்கிறாரு..
அதனால விஜயபாஸ்கரை எப்ப திமுகவில சேர்க்கிறதுன்னு இறுதி முடிவு எதுவும் எடுக்கலை”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
