தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வருகை தந்தார்.
சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்லியிலிருந்து ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.
ஸ்டாலின், எனது மிகச்சிறந்த நண்பர், கிட்டத்தட்ட எனது சகோதரரைப் போன்றவர். ஆனால் அதையும் தாண்டி, நான் அவருக்காகப் பிரசாரம் செய்ய வந்ததற்கு முக்கியக் காரணம், அவர் தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்து வரும் சிறப்பான பணிகள் தான். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது, பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் அவருக்கு மீண்டும் வாக்களித்தால், இந்த நல்ல பணிகள் தொடரும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு இன்னும் பல மடங்கு முன்னேறும்.
ஆனால், ஒருவேளை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இதுவரை செய்யப்பட்ட அனைத்து நல்ல பணிகளும் வீணாகிவிடும்.
ஏனென்றால், டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். அந்த கசப்பான அனுபவங்களை நான் இங்குள்ள மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமையன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அதில் நான் மக்களிடம் விரிவாகப் பேசுவேன். ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
மத்தியில் இருக்கும் பாஜக அரசு, மாநில அரசுகளை ஒடுக்குவதற்கும், எல்லா இடங்களிலும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கும் முயற்சி செய்கிறது. மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் ஒரு சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஸ்டாலின், மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) என்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அது இப்போது தோற்கடிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்தியில் உள்ள மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

நன்றி தெரிவித்த ஸ்டாலின்
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருகை தந்ததற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
