முழு அமைச்சரவை எப்போது? அரசுக்கு கேள்வி!

Published On:

| By Kavi

தவெக ஆட்சியமைந்து கணிசமான நாட்கள் கடந்த நிலையில் இன்னும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த மே 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 

ADVERTISEMENT

இவர்களை தவிர இன்னும் விஜய்யின் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. 

இதுதொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். 

ADVERTISEMENT

அதில்,  “தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொழிலாளர் நலன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகள் முழுமையான நிர்வாக கவனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம் காரணமாக அரசின் செயல்திறன் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தார்கள் தவிர, நிர்வாக தாமதங்களுக்காக அல்ல. அரசு அமைந்த உடனேயே முழுமையான அமைச்சரவையை ஏற்படுத்தி, ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான அமைச்சர்களை நியமித்து மக்கள் நல திட்டங்களை வேகமாக செயல்படுத்த வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும்.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்து, நிர்வாகத்தில் நிலவும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share