தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக விஜய் கோரியுள்ளார். விஜய்யின் இந்த கோரிக்கை குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. இந்த நிலையில் விஜய்யுடன் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு ஆதரவு தருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று மே 5-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை பற்றி விவாதித்தோம். அதாவது தேர்தலுக்கு பிந்தைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசித்தோம்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டுள்ளார். தமிழக மக்கள், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்காகவும் அரசியல் சாசனத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளனர் என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது.
பாஜகவும் அதன் கூட்டணி பரிவாரங்களும் எந்த ஒரு வகையிலும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
பெருந்தலைவர் காமராஜரிடம் இருந்து தாம் ஊக்கம் பெற்றிருப்பதாக பேசியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
தமிழ்நாட்டு மக்கள் அளித்த தேர்தலில் அளித்த தீர்ப்பில் வெளிப்பட்ட உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் விஜய் கோரிக்கை விடுத்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இறுதி முடிவு எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இவ்வாறு கேசி வேணுகோபால் தெரிவித்தார்.
